19 டி.எம்.சி., தண்ணீருக்காக, காங்கிரசார் பாத யாத்திரை

2 years ago 594

விஜயபுரா : ''மேகதாது திட்டத்தின், 19 டி.எம்.சி., தண்ணீருக்காக, காங்கிரசார் பாத யாத்திரை நடத்துகின்றனர். ஆனால், கர்நாடகாவின் வட மாவட்டங்களின் மக்களுக்கு, சட்டப்படி கிடைக்க வேண்டிய, கிருஷ்ணா ஆற்றின், 911 டி.எம்.சி., தண்ணீரை பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், கர்நாடக உணவு, பொது வினியோக கார்ப்பரேஷன் தலைவருமான பாட்டீல் நடஹள்ளி தெரிவித்தார்.

விஜயபுரா முத்தேபிஹாலில் அவர் நேற்று கூறியதாவது:கிருஷ்ணா ஆற்றின், 270 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்த, கர்நாடகாவின் வட மாவட்டங்களின் மக்களுக்கு சட்டரீதியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.கிருஷ்ணா நீர்ப்பாசனத்துக்குட்பட்ட துங்கபத்ரா, மல்லப்பிரபா, பீமா, கிருஷ்ணா ஆற்றின் 911 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்த நீதிமன்றம் சட்டப்படி வாய்ப்பளித்துள்ளது.இந்த தண்ணீரை பயன்படுத்தாததால், ஆண்டு தோறும் ஆந்திராவுக்கு பாய்ந்து செல்லும், 442 டி.எம்.சி., தண்ணீரை பற்றி யாரும் ஆலோசிக்கவில்லை. எங்கள் உரிமையை பெற நாங்கள் போராடியிருந்தால், எங்கள் பகுதி எப்போதோ பஞ்சாப் ஆகியிருக்கும். எங்கள் வயல்களுக்கு தண்ணீர் வந்திருக்கும்.எங்களின் கஷ்டங்களை கேட்போர் யாருமில்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, நாங்கள் கைகூப்பினால், மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்புகின்றனர்.நுாற்றுக்கு 75 சதவீதம் அரசு பணிகள், மைசூரு, பெங்களூரு பகுதியினருக்கு கிடைக்கிறது. இதற்கு அங்குள்ள அரசியல்வாதிகளின் செல்வாக்கு, சலுகைகளே காரணம். இவை எங்களிடமில்லை.சட்டசபையிலும் இதை நான் கூறினேன். எங்கள் பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வட மாவட்ட மக்களுக்கு, அனைத்திலும் சம பங்கு, சம வாழ்வு கிடைக்க செய்வேன்.காவிரி ஆற்றின், 19 டி.எம்.சி., தண்ணீருக்காக, மேகதாது திட்டத்தை வலியுறுத்தி, காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர். ஆனால், கிருஷ்ணா ஆற்றிலிருந்து, வட மாவட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய, 911 டி.எம்.சி., தண்ணீரை கிடைக்க செய்ய யாரும் தயாராக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article