ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்

2 years ago 606

‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கொரோனா சூழல் இணைய வழி கல்வி, வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஆகிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதோடு, ஒவ்வொரு துறையிலும் தனியே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும், கொரோனா சூழல் காரணமாக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன

.ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சவாலான நிலையை சமாளிக்க புதுமையான வழிகளை பின்பற்றி வரும் நிலையில், வீடு வாங்கும் விருப்பம் கொண்டவர்கள் புதிய வீடுகளை தேடி கண்டறியும் முறையும் மாற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும், எதிர்கால போக்குகளையும் பார்க்கலாம்.

டிஜிட்டல் வழி

கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வீடு வாங்க விரும்புகிறவர்கள், விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரும் டிஜிட்டல் வழியை நாடத் துவங்கியுள்ளனர். விலை நிலவரம், வீடுகளின் அமைவிடம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள, பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட் இணையதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னரே கூட, ரியல் எஸ்டேட் இணையதளங்களை பலரும் பயன்படுத்தினாலும், தற்போது இது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் பயன்பாட்டில் 10 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சில மாதங்களில் நிகழ்ந்துள்ளன என ரியல்எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர்.வாடிக்கையாளர்கள் இணையதளங்கள் வழியே தகவல்களை நாடும் நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை சென்றடைய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன.

வி.ஆர்., எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் புதிய வீடுகளை பார்க்க வைக்கும் உத்தி பின்பற்றப்படுகிறது. மேலும் பல நிறுவனங்கள் முப்பரிமாண செயலி வாயிலாக வீடுகளை சுற்றி காண்பிக்கின்றன. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பெரிய வீடுகள்

அதே போல வீடுகளை வாங்க திட்டமிட்டுள்ளவர்களின் விருப்பத் தேர்வும் மாறத் துவங்கியிருக்கிறது. பலரும் அளவில் பெரிய வீடுகளை நாடுகின்றனர். இணைய வழி கல்வி மற்றும் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு தொடரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு ஏற்ற வகையில் நல்ல இட வசதி கொண்ட வீடுகளை வாங்க விரும்புகின்றனர்.பெரிய வீடுகளை வாங்க விரும்புகிறவர்கள் நகருக்கு வெளியே அவை அமைந்திருந்தாலும் கவலைப்படுவதில்லை. மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

புறநகர் பகுதிகளில் பெரிய வீடுகள் கிடைக்கும் என்பதோடு, காற்றோட்டமான வசதி, இயற்கையான சூழல் ஆகியவையும் சாதகமாக அமைவதாக கருதுகின்றனர்.பலரும் நகரை விட்டு தொலைவாக உள்ள பகுதிகளில், நல்ல வசதி கொண்ட இரண்டாம் வீட்டை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. ஆரோக்கியம், சுகாதாரம், இயற்கையான தன்மை உள்ளிட்ட அம்சங்களை வீடு வாங்குபவர்கள் முக்கியமாக கருதுகின்றனர்.

நகருக்கு வெளியே வீடு அமையும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவதும் சாத்தியமாகும் என்றும் நினைக்கின்றனர். இந்த புதிய போக்கிற்கு ஏற்ப நிறுவனங்களும், நகருக்கு வெளியே புதிய குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் செய்வதும் அதிகரித்துள்ளது. புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன.

Read Entire Article